வியாழன், 28 ஜூன், 2012

இப்படிக்கு பேதையிவள்...


அன்புள்ள ஆருயிரே
ஆறுதல் யாருமின்றி
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
ஆணழகன் உம் வரவை

யாரு அறியாமல் என்
வாசல் வந்தவரே - உமை
கண்டவுடன் காணவில்லை
கன்னியிவள் காதல் நெஞ்சை

ஊரும் தெரியாது -நீர்
செல்லும் வழியும் புரியாது
ஊமையிவள் தவிக்கின்றேன்
கிளையில்லா ஊஞ்சல்போலே

தனித்திருந்த வேளையிலே
என் கதவு தட்டியவரே
பனித்துளிபோல் என் நெஞ்சை
சிதறடித்து சென்றீரே

எட்டி நின்று பேசிப்போவீர்
என்றினைந்து கதவு திறந்தேன்
எத்தன் நீர் என் நெஞ்சை
கவர்ந்திடுவீர் என்றறியேன்

வெளி வந்த  என்னை  - உம்
வெண் பார்வையால் சலவை செய்தீர்    
காதல் எனும் கவிதை சொல்லி
கன்னியோடு கலவி செய்தீர்

அருகருகே வந்து என்
அழகு கரம் பிடித்திட்டீர்
அன்போடு பேசியென்
அடிநேஞ்சை வருடிவிட்டீர்

கருவிருன்தீன்ற தாயை
கன்னியிவள் மறந்துபோனாள்
மருட்டிவிடும் உம்மழகில்
மஞ்சள் மயில் மயன்கிப்போனாள்

மன்னன் உமை கண்டதும் என்
மாராப்பு விலகியதென்ன
கண்ணன் போல் வந்திந்த
ராதயினை இரசித்ததென்ன

நாணமெனும் வேலிக்குள்
நானிருந்த வேளையிலே
காதலெனும் கத்தி கொண்டு
வேலி தாண்டி வந்தவரே

தாலி கொண்டு வந்தென்னை
கரம் பிடித்து சென்றுடுவீர்
போலியான வாழ்வினிலே
பொய்யாக் காதலொன்றுரைத்துடுவீர்  

எட்டுத்திசையும் பார்க்கின்றேன்
உமை எண்ணி எண்ணி தவிக்கின்றேன்
உம் துணையின்றி பாவையிவளுக்கு
பாரினிலே சொந்தமில்லை

வெள்ளி, 22 ஜூன், 2012

காதல் ரணங்கள்...



அன்பே ஆருயிரே என்று
ஆசையில் சொன்ன வார்த்தைகள்
காற்றருவியில் இன்னும்
கரையவில்லை கண்ணே..
நேற்றைய நாளில்-உன்னை
நெருங்கிய நிமிடங்களில்
அதிகரித்த என் இதயத்துடிப்பு
இன்னும் அடங்கவில்லை பெண்ணே...
உன்னோடு பேசிய கணத்தில்
நீ தந்த முத்த ரணத்தில்
என் நெஞ்சுக் கூடு
கனக்கிறது கண்ணே...

நிலவில்கூட ஊறும்
இது நிரூற்றல்ல
கண்நீரூற்று
முறைகாரன்  நானிருக்க
மூன்னு முடிச்சு
உன் கழுத்தில் விழுந்த
கதை கேட்டால்....
பட்ட மரத்திலும்
உதிரம் கொட்டும்
பாவை நீ
உற்ற இவனை விட்டு
ஊரவனோடு சேர நேர்ந்தால்...

கூட வந்த இவனை
கூண்டில் அடைத்துவிட்டு
சோலைமயில் போனதெங்கே..
காலை வெயில் வேளையிலே
கடற்கரை மணலிலே நம்
கைகள் அணைத்து
கட்டிய வீட்டை
அலை கொண்டு போனதெங்கே..
மாலையில் கோர்த்த
இரு முல்லை பூக்கள்
ஊர்வலம் போகுமுன்
உதிர்ந்து போனதெங்கே..

பனை மரத்து நிழலை
பாவியிவன் நம்பி
பாய் விரித்து படுத்தானோ...
பாழ்பட்ட உலகிலே
காதல் என்பது
கானல் நீரோ..
ஆனாலும் பூவே
நீ தந்த இதயம்
எனக்கு மட்டும்தானடி..
அவனுக்கும் சேர்த்து
உன்னை நேசித்தவன்
நான் மட்டும்தானடி..

உன் கன்னக் குழியிலே
விழுந்த இக் கள்வனுக்கு
கடைசியாய் ஒருமுறை
கண்காட்டி போ பெண்ணே..
என் இதயத்தில்
சோகம் இல்லை
வாழும் உன் வாழ்வு
சிறக்குமென எண்ணி...
கண்களில் கண்ணீர் இல்லை
கை பிடித்தவன் உன்னை
கலங்க விடமாட்டான்
என எண்ணி..

அவனோடு வாழ்ந்தாலும்
வந்து போகும் இவன் நினைவுகளை
பத்திரமாய் பூட்டி வை
நெஞ்சோடு பொத்தி வை
உன் கண்ணோடு ஈரம் வேண்டாம்
என் நெஞ்சோடு நீ வாழ்வாய்...
என் வாழ்வோடு நீ வேண்டாம்
உன் நினைவோடு நான் வாழ்வேன்....
உன் பூ முகம் வாடாது
பொன் விழி கலங்காது
மகராசி நீ வாழ - என்
மனமென்றும் வாழ்த்தி நிற்கும்..