உன் கண்கள் எனும் காந்தத்தால்
என் இதயம் எனும் இரும்பை
களவாடிச் செல்கிறாய்
காரணம் கேட்டதற்கு
காதலைச் சாடினாய்
வாரணம் புடைசூழ்ந்து
வாழ்க்கை மீது படை எடுத்தாய்
காதல் எனும் நாணேற்றி
கண்கள் எனும் கணை தொடுத்தாய்
என் இதயம் எனும் இலக்கில் விட்டாய்
நீ தொடுத்த கணை உன்னிடமே
என் இதயமோ உன் வசமே...
உன்னைத்தான் நேசித்தேன்
உன்னைத்தான் சுவாசித்தேன்
உன்னைத்தான் யாசித்தேன்
உன் அருகில் வரத் துடித்தேன்
என் அறியாமையில் வாடித் தவித்தேன்
என் கண்ணாடி இதயத்தில்
உன்னை வைத்து பூட்டிவிட்டு
வெளியிலே வெள்ளை அடித்தேன்
நான் மட்டும் காண்பதற்கு
கண்கள் எனும் யன்னல் வைத்தேன்
உயிரிலே உன்னை சுமந்து
ஊருக்கு தெரியாமல் நடித்தேன்
நினைவு எனும் ஜாடிக்குள்
காதல் எனும் செடி வைத்தேன்
கற்பனை எனும் நீர் ஊற்றினேன்
உயிரை உருக்கி உரமாக்கினேன்
நான் வளர்த்த காதல் செடி
வண்ணம் வண்ணமாய் பூக்கள் பூக்க
அப் பூக்களுக்கு சொந்தக்காரி
நீ மட்டும் தானென்று
வார்த்தைகளில் சொல்லவந்தேன்
வாயடைத்துப்போய் நின்றேன்
உதடுவரை வந்த வார்த்தை
உன்னை பார்த்த கணமே
உயிரிலே உறைந்ததென்ன...
உன்னில் நான் கொண்ட காதல்
உலகிற்கு புரியாது
உனக்கும் தெரியாது
நான் கொண்ட காதலும்
ஊமை கண்ட கனவும்
உண்மையில் ஒன்றுதான்
உருவமில்லா என் காதலுக்கு
உயிர் கொடுத்தவள் நீதான்
சூரியனின் ஓளி பட்டு
தெறிக்கும் நிலவா நீ....
கதிரவனுக்கும் ஓளி கொடுக்கும்
உவமானம் இல்லா உருவம் நீ...
பனித் துளிகள் உனை விட
பரிசுத்தமானவையா... ....
பாலொளி தெறிக்கும் உன்
பளிங்கு முகத்துக்கு
பௌர்ணமி நிலவுகள் ஈடாகுமா... ...